நூல் அறிமுகம்: என்னைக் கவர்ந்த நெருஞ்சி முள்.

s. ரம்யா

graphic எழுத்தாளர் சிவசங்கரி
சமூக நாவல் படைப்பதில் முதன்மையான பெண் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள். அவரது புதினத்தில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள், பெண் முன்னேற்றம் போன்றவை விரவிக் கிடக்கும். நாம் இவரது படைப்பான நெருஞ்சி முள் என்ற புதினத்தைப் பார்க்கலாம். இது ஒரு சமூகநாவல். பூமா என்ற பெண்ணின் சமூக வாழ்க்கையைக் கூறுவதே நெருஞ்சி முள்.

பூமா ஒரு வக்கீலின் மகள். இவர் தந்தை வக்கீல் தொழிலை விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். அது பூமாவின் அண்ணனுக்கும் அண்ணிக்கும் பிடிக்கவில்லை. சகா சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றனர். பூமாவின் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பேருந்து விபத்தில்  உடல் கருகி இறந்துவிடுகிறார்.

அண்ணன் அப்பாவிற்குக் காரியம் செய்ய வரமாட்டேன் என்கிறான். பூமாவும் அவள் அம்மாவும்  விபத்து நடந்த இடத்திற்குச் செல்கின்றனர். கருகிக்கிடந்த பிணக்குவியலுக்கிடையே தன் தந்தையின் உடலைக் கண்டுபிடிக்க இயலவில்லை. கூட்டு சவ அடக்கம் நடைபெறுகிறது. தன் தந்தை சொல்லிக்கொடுத்த காந்திய கொள்கையில் பூமா அதிகம் ஊறிப்போகிறாள். தந்தையின் இறுதிச்சடங்குக்கு மகன் வராததால் பூமாவின் அன்னை தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

தனி வாழ்க்கை தொடங்கிய பூமாவும் அவள் அன்னையும் பல இன்னல்களை சந்திக்கின்றனர். அனேக கதையில் வருவதைப்போல் பூமாவின் அன்னை முறுக்கு சுட்டு வியாபாரம் செய்து தன் குடும்பத்தை ஓட்டுகிறாள். பூமா சுகாதார மையத்திற்கு வேலைக்குச் செல்கிறாள். அங்கு சமூக சேவையைப் பற்றி நன்கு கற்றுக்கொள்கிறாள். அங்கு கமலம் என்கிற தோழியோடு இணைந்து அருகிலுள்ள குப்பத்திற்குச் சென்று சுத்தம், சுகாதாரம், கல்வி, குடும்பக் கட்டுப்பாடு போன்ற கொள்கையை அம்மக்களிடம் புகுத்துகிறாள்.

ஒரு காலகட்டத்தில் அந்தச் சுகாதாரமையம் மூடப்படவே, பூமா ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டே மாலை நேரத்தில் அருகிலுள்ள பெண்களுக்கெல்லாம் கைத்தொழில் கற்றுத்தருகிறாள். பின்பு அபையா சேரிட்டி கிளப்என்ற ஒரு அமைப்பை நிறுவி பணக்கார மக்களிடமிருந்து உதவித்தொகை பெற்று ஏழை மக்களுக்கு சேவை செய்யத் துவங்குகிறாள். அந்த இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றுகிறாள். அந்த அமைப்பின் மூலம் ஒரு முதியோர் இல்லம் துவங்குகிறாள். அதில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெண்களையெல்லாம் தேடிக்கொண்டுவந்து சேர்த்து அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் போன்ற இதர காரியங்களைச் சிறப்பாகச் செய்கிறாள்.

பூமாவிற்கு ஒரு விடயம் தன் நெஞ்சை உறுத்திக்கொண்டே இருந்தது. அது அவள் அன்னை இறந்தபோது அவள் அண்ணன் வந்து பார்க்காததுதான். பூமா வீட்டிற்குப்போய் அண்ணன் காலில் விழாத குறையாகக் கெஞ்ச, அண்ணன் அண்ணி பேச்சைக் கேட்டுக்கொண்டு தன் அன்னையைப் பார்க்கவரமாட்டேன் என்று கூறிவிட்டான். பூமாவே தன் தாய்க்கு கொள்ளிவைக்க நேரிட்டது.

இதே கதை தன் ஆசிரமத்திலும் தொடர்ந்தது. இல்லத்தில் தங்கியிருந்த ஒரு அன்னை இறந்தபோது அந்த அன்னையின் மகன் பார்க்கவோ அல்லது பிணத்தை வாங்கவோ வர தயாராக இல்லை. பூமாவே பலமுறை முயன்றுபார்த்துவிட்டு, கொண்டுபோய் சுடுகாட்டில் வைத்து கொள்ளிவைக்க நேரிட்டது. அவள் நெஞ்சை உறுத்திய நெருஞ்சி முள் விட்டு அகன்றது. இதனாலேயே இப்புதினத்திற்கு இப்பெயர் வந்திருக்கும் போலும்.
       நான் இந்த புதினத்தைப் படித்தது பார்வையற்றோரின் படிப்பு தாகத்தைப் பெரிதும் போக்கிவரும் கிண்டில் தளத்தில்தான்..
 கட்டுரையாளர் காரைக்காலிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வரலாற்றுப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
தொடர்புக்கு Ramyatrp 111@gmail.com
நீங்கள் இதைத் தவறவிட்டிருந்தால்
நூல் அறிமுகம்: எனக்குப் பிடித்த கட்டை விரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக