சிந்தனை: யார் நான்?


சோஃபியா
graphic ஹெலன்கெல்லருடன் ஆன் சலிவன்
 செப்டம்பர் மாதம் என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆம், தனக்குப் பிடித்த தன்மேல் அக்கறையும் அன்பும் கொண்ட ஆசிரியரைக் கொண்டாடும் தினம். ஆசிரியராகிய நம்மைக் கண்ணாடி என மாணவன் பிரதிபலிக்கும் தினம்.  ஆசிரியர் தினம். இந்த தினத்தில் நான் யார் என ஒரு ஆசிரியர் தன்னை உணர்தல் மிக அவசியமான ஒன்று.

"ஆசிரியர் என்பவர் தினம் பயிலும் மானவன்; அவர் மானவர்களை தூண்டுபவராக இருக்க வேண்டும்" என்கிறார் வின்சண்ட் சர்ச்சில்.
"நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்." ... மாவீரன் அலெக்சாண்டர்.
"யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார்"  ... கதே.
இவ்வாறு தம்  ஆசிரியர்களை ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு சூழலில் நினைவு கூறத்தான் செய்கிறான். அப்படியிருக்க நாம் சிறந்த ஆசிரியரா, நம்மால் ஒரு சிறந்த மாணவனை நல்லதோர் குடிமகனை உருவாக்கிட முடிகிறதா, என்ற கேள்விகளுக்கு விடை தேட முயல்கிறேன்.

உலக நாடுகளில் ஆசிரியர் என்பவர் பெரிதும் மதிக்கத்தக்க ஒருவராகக் கருதப்படுகிறார். அவர்  உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிக்குச் சமமாக நடத்தப்படுகிறார். ஆனால் நம் நாட்டில் ஆசிரியரை வெறும் குழந்தைகளைக் கையாளும் ரிங்மாஸ்டர் போல மதிக்கின்றனர். அவர் மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும் பயிற்றுநராகவே கருதப்படுகிறார். தற்சமயம் கோப்புகளை நிரப்பும் இயந்திரமாக மாற்றப்பட்டுள்ள ஆசிரியர்கள் அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஓடும் செக்கு மாடுகள் போல ஆகிவிட்டனர்.

மாதா, பிதா, குரு , தெய்வம் என்கிறது மூத்த மொழி. ஆம், தாய் தந்தையை விட குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடும் நாம் அவர்களைச் சரியாக புரிந்து இருக்கிறோமா? மாணவர்களது பின்புலம் குடும்பச் சூழ்நிலை  போன்றவற்றை நாம் உணர்ந்து அறிந்து அவனை வழிநடத்துகிறோமா?

இன்றைய மாணவர்கள் பலதரப்பட்ட  இடையூறுகளுக்கு மத்தியில் போர்க்களச் சூழல்களில் பயணிக்கின்றனர். பலதரப்பட்ட வசதிகளும் வாய்ப்புகளும் அவர்களை முன்னேற்றவும் திசைத்திருப்பவும் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கின்றன. அப்படியிருக்க இன்றைய மாணவர்கள் எளிதில் எதையும் தன்வசம் ஆக்கிட முயல்கின்றனர். எதையும் எளிதில் மட்டுமே கிடைக்க வேண்டும் தான் நினைப்பவை எல்லாம் நடந்திட வேண்டும். அதுவும் விரைவில் கைவசமாகிட வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்து தன் இளமைப் பருவத்தை கடத்தத் துடிக்கின்றான்.

உடனடி காஃபி போல் உடனடி வெற்றியை தேடும் பெரும்பாலான மாணவர்கள் நினைத்தது கிடைக்காத பட்சத்தில் மாற்று வழி என்ன, அதை எவ்வாறு எட்டிப்பிடிப்பது என்பதை யோசிக்க மறுக்கும் இந்த இளைய சமுதாயம், வாழ்க்கையை எப்படி அனுக வேண்டும் என்கின்ற அறிவு  பெற்றோர்களாலும் சமுதாயத்தாலும் கொடுக்கப்படுவதில்லை. தோல்வியை ஏற்க்கும் மனப்பக்குவத்தோடு வளர்க்கப்படுவதில்லை. பெற்றோரின் அதீத பாசமும் வசதியான வாழ்க்கை முறை தான் பட்ட கஸ்டம் தன் பிள்ளைகளுக்கு தெரியக்கூடாது என வறுமையை மறைத்துக் கேட்பதையெல்லாம் பெற்று தருவது தான்   காரணங்கள் என்பேன் நான்.  கூட்டுக்குடும்ப வாழ்க்கை இல்லாமையும் தாத்தா பாட்டி உறவுகள் இழப்புமே பிரச்சனைகளுக்குக் காரணம். நட்பில் பற்றாக்குறை, ஆணாதிக்க மனப்பான்மை இவைகளும் குழந்தைகளைக் கொல்லும் மெல்ல விசங்களாகும். அவைகளை மாற்றும் வல்லமை ஆசிரியர் ஒருவருக்கே உண்டு.

தனிமையும் விரக்தியும் நண்பர்களுடன் பழகாமையும் இத்தகைய மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆட்படுத்துகிறது. பெற்றோரின் உச்சகட்ட கண்டிப்பு மதிப்பெண் மட்டுமே தங்களின் கௌரவம் என்ற மனப்பான்மையில் மாணவர்களைப் படிப்பில் கட்டாயப்படுத்துதல். மற்றவரோடு ஒப்பிடுவது போன்ற காரணங்கள் மாணவர்களை தோல்வியில் தள்ளுகிறது. தோல்வி அடையும் வேலைகளில் பெற்றோரது புறக்கணிப்பும் உறவினர்களது அலட்சியமும் சேர்ந்து அக்குழந்தை தற்கொலை என்னும் வெற்றிப் பாதையை தேர்வு செய்கிறது. தற்கொலை செய்யத் துணியும் அக்குழந்தைக்கு எவ்வளவு மன தைரியம் இருக்குமென உணர்தல் இங்கு அவசியம். அதை நல்லவிதத்தில் பக்குவப்படுத்தி இருந்தால் அக்குழந்தை வெற்றி தோல்வியை சமமான நிலையில் கையாளக் கற்றிருக்கும். வெற்றி நோக்கி ஓடுவது மட்டுமே வாழ்க்கையின்நோக்கம் அன்று. அதைத் தாண்டி வாழ்க்கை பல கோணங்களில் விரியும், சுருங்கும் எனச் சுட்டிக்காட்டி  சரியான புரிதலை உருவாக்கும் ஒரே சக்தி ஆசிரியர்.

பெற்றோர் குழந்தைகளை நம்மிடம் விடும்பொழுது அக்குழந்தைகள் ஈரமான களிமண் போலதான் இருக்கிறார்கள். அந்த ஈரத்தில்  போட்டி, பொறாமை, விட்டுக்கொடுக்காமை போன்ற சிற்சில அழுக்குகள் ஒட்ட வைக்கப்பட்டிருப்பதை  நம்மால் உணர முடிகிறது. தான் சாதிக்க முடியாததை தம் பிள்ளைகள் வசம் சாதிக்க துடிக்கும் பெற்றோர்களது முதல் பாடம் இவைகளாகிவிட்டன. அப்படிப்பட்ட குழந்தைகளது மனநலம் உடல்நலம் நம்மால் வளர்த்து விடப்படும் சூழலில் தன் ஆசிரியரைக் கண்மூடித்தனமாக நம்புகிறது அந்த குழந்தை. அப்படியிருக்க அவர்களை தேர்வுக் களத்தின் மதிப்பெண் தேடும் போட்டிக் குதிரைகளாக்கி விட்டோம். முதலாக வருபவனை மட்டுமே முந்தி கொண்டு பாராட்டும் இந்த சமுகம் ஏனோ தோல்வி அடைபவனை உந்தி விட வருவதில்லை.  தன் பிஞ்சு மனத்தில் விதைக்கப்பட்ட களைகளை புறம் தள்ளி பூக்கும் புதிய மொட்டுகள் எளிதில் வெற்றி அடைகின்றனர். அத்தகைய வெற்றியை கையகப்படுத்தித் தருபவர் ஆசிரியர்.

புறக்கணிப்பும் ஏளன பேச்சும் ஒரு குழந்தையை வலுவிழக்கச் செய்து தன் உயிரை இழக்கும் உந்துதலைக் கொடுக்கிறது. இது பெற்றோரின் இயலாமையும் சமுகத்தின் பொறுப்பற்ற விதத்தையுமே காட்டுகிறது. ஆனால் ஒரு ஆசிரியர் எந்த மாணவனையும் சோர்ந்து போக விடுவதில்லை. ஊக்கப்படுத்தி அவனை மீண்டும் மீண்டும் எழுந்து ஓட கூடிய சக்தியைத் தருகிறார்.

graphic சைகைமொழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்
 ஒரு சிறந்த ஆசிரியர் மதிப்பெண்ணை மட்டுமே நோக்கமாக மாணவனுக்குள் திணிப்பதில்லை. மாறாக, சமுதாயத்தில் மதிப்பு மிக்க மனிதர்களை உருவாக்கிடவே முயலுகிறார். நல்லாசிரியர் என்பவர் மாணவர்களை தன் வசம் வைத்துக் காரியம் சாதிப்பவராக இருக்க முடியாது. கல்வியோடு ஒழுக்கமும் நம்பிக்கை உணர்வையும் வளர்ப்பவராக இருக்க வேண்டும். மாணவரது வித்தையை மனதால் உணர்ந்து அவனை சாதனைக்குரியவனாக மாற்றும் திறமையும் யுத்தியும் ஒரு ஆசிரியருக்கு மட்டுமே தெரியும். தெரிந்திருக்க வேண்டும். வெறும் சம்பளத்திற்காகவும் தற்பெருமைக்கும் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் நொண்டிக் குதிரைகள்.

சாதி மதம் இனம் அற்ற வெற்று மனிதனாக ஆசிரியர் இருக்க வேண்டும். அவரது தேடல் புரிதல் அனைத்துமே மாணவரது முன்னேற்றப் படிகளை அமைக்க வல்லதாக இருக்க வேண்டும். வெட்கம் கூச்சம் போன்ற உணர்வுகளை தள்ளி ஆண் பெண் பேதமற்றவராக தன்னை மாணவனுக்கு ஏற்றாற்போல பிரதிபலிக்கும் கண்ணாடிபோல் ஆசிரியர் இருத்தல் அவசியம். தோல்வியை ருசிக்க கற்றுத்தர வேண்டும். விழுந்தாலும் எழவும், எழுந்தாலும் தடைகளை தகர்த்து ஓடவும் கற்றுத் தருதல் அவசியம்.  பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சூத்திரங்களையும் திறனையும் மாணவர் வசம் வளர்க்க வேண்டும்.

மாணவர் பருவத்தை சரியாகப் பயிர் செய்யக் கற்றுக்கொண்ட  உழவர்கள்  ஆசிரியர்கள். அவர்கள் மட்டுமே மாணவர் உள்ளங்களில் என்றும் வாழ்ந்திருப்பார். அவர் ஆசிரியராக, தந்தையாக, தாயாகத் தன்னைப் பிரதிபலிப்பதை விட நண்பராகப் பிரதிபலிப்பதையே மாணவன் விரும்புகிறான். அவன் விருப்பத்தை உணர்ந்து அன்பு நட்பு கண்டிப்பு தோழமை என மாணவனாக வாழும் ஆசிரியருக்கே மாணவர்களிடத்தில் மவுசு அதிகம்.

தன்னை உணர்ந்த ஆசிரியர் மட்டுமே மாணவனை முழுமையாக உணர முடியும். மாணவரை உணர்ந்தவரால் மட்டுமே ஒரு சிறந்த ஆசிரியராகத் திகழ முடியும். ஆசிரியர் தினம் கற்கும் மாணவன், அவன் மாணவனை தினம் செதுக்கும் சிறந்த சிற்பி, படைப்பாளி, சமுக அநீதிகளை எதிர்த்து போராடும் போராளி, தன் வெற்றியை மறந்து பிறர் வெற்றிக்காகப் பாடுபடும் உழைப்பாளி, அத்தகைய ஆசிரியரை போற்றிப் பாதுகாக்க வேண்டியது இந்த ஜனநாயகத்தின் மாபெரும் கடமை.

அகிம்சையைக் கற்றுத்தந்த மகாத்மாவையும், தீவிரவாதத்தைத் தீட்டிக் கொடுத்த நேதாஜியையும், அண்ணல் அம்பேத்கரையும், பெரியாரையும் தமிழறிஞர் கலைஞரையும் சிறந்த வழிகாட்டிகள் எனப் பின்பற்றும் நாம், ஆசிரியர்களை இந்த ஒருநாள் மட்டும் கொண்டாடாமல் அவர்தம் சேவையைப் போற்றிட வேண்டும்.

இந்நாளில் என்னைச் செதுக்கிய எனக்குள் தன்னை வார்த்துக் கொண்ட அத்துனை ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து நன்றி உரைக்கிறேன்.
தொடர்புக்கு sophiamalathi77@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக