கவிதை: கைபேசியால் கவலை!


அ. கௌரி
graphic மொபைல் பார்த்துக்கொண்டிருக்கும் பையன்
உருவினில் சிறிதிதில் உலகமும் அடங்குது,
உறவுகள் தொலைவதில் உள்ளங்கள் சுருங்குது!
அருகினில் இருப்பினும் தொலைவதைத் தோற்றுது,
ஆண்டவன் போலதைக் கருதிக்கொண் டாடுது!

காதலர் மனதில் முதற் பொரு ளாகுது,
காலையில் விழித்ததும் கையதைத் துழாவுது!
கண்ணுக்கும் காதுக்கும் விருந்தென உலவுது,
காண்பதும் கேட்பதும் விரைவினில் குறையுது!

குருவிகள் வாழ்வினை கோபுரம் அழிக்குது,
கூடுதல் கணக்கினில் சிற்றுயிர் சரியுது!
இறவுகள் குறைந்தே பகல் பொழு தாகுது,
இயற்கையைத் தவிர்த்தே தொலைவினில் துரத்துது!

உழைப்பினைக் குறைத்து நோய்களைப் பெருக்குது,
உண்மையின் தன்மையைஅறிந்திடத் தடுக்குது,
களைப்பையும் சோர்வையும் கதிர் உரு வாக்குது,
காகிதப் பூக்களாய் காட்சியைக் கவருது!

வெளிவிளை யாடல்கள் அறிதென ஆச்சுது,
வெண்ணிலா வானிலே தனியெனத் தவிக்குது!
அதிர்வுகள் நரம்பினை அயர்வினில் இருத்துது,
ஆக்கமும் ஊக்கமும் அடியோ டழியுது!   

குழந்தைகள் மனதைக் குப்பைமே டாக்குது,
கவனமும் சிதறியே கவலையைக் கொடுக்குது,
இளைஞர்கள் வீழ்ச்சியில் பெரும் பங்கு வகிக்குது,
இதனினும் கொடுமையாய் வாழ்வையே முடிக்குது!

நல்லதைப் பயின்றால் நன்மையைத் தருகுது,
நால்வகை உதவிகள் நமக்கென இருக்குது,
அல்லவை தவிர்த்தால் ஆறுதல் அளிக்குது,
அளவுடன் இருந்தால் விளைவினைக் குறைக்குது!    
(கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தின் கணக்கர்).
தொடர்புக்கு: gowri.sgg@gmail.com

1 கருத்து:

  1. மிக அருமையான ஓர் கவிதை இந்தப் படைப்பு வரவேற்கத்தக்கது இந்தக் கவிதையை படைத்த படைப்பாளிக்கு எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு