அரசியலில் நாம்-13: பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை - ரா. பாலகணேசன்

 வணக்கம் வாசகர்களே!

      இதுவரை அரசியல் ஆளுமைகளாகத் திகழும் பார்வையற்றவர்கள் சிலரை அறிந்துகொண்டோம். இந்த இதழில் ஓர் அமைப்பைக் குறித்து விரிவாக அறிந்துகொள்ள இருக்கிறோம்.

போராட்டங்களின் வழியாக பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பெற்றுத்தர பல அமைப்புகள் இருக்கின்றன. பள்ளி மாணவர்கள் தொடங்கி, வயதுவந்த வணிகர்கள் வரை பல தரப்பினருக்கும் உதவி புரிந்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொண்டு நிறுவனங்களும் இங்கு நிறைய இருக்கின்றன. இத்தனை அமைப்புகள் இருந்தும், நமக்காகச் சிந்திப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்ட ஏதேனும் ஒரு அமைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கான ஒரே ஒரு விடையாக வந்து நிற்கிறதுபார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை’ (progressive thinkers forum of the blind).

      ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காகப் போராடுவதும், அத்தகையவர்களுக்குத் தொண்டு செய்து அவர்களது வாழ்வை மேம்படுத்துவதும் முக்கியமான தேவைதான். ஆயினும், அவர்களைப் பற்றி சிந்திப்பது, அவர்கள் நலனில் நாம் இன்னும் என்னென்ன விதங்களில் எல்லாம் அக்கறை காட்டமுடியும் என்பதை ஆராய்வது முதலிய பணிகள் முக்கியமானவை; அவசியமானவை. எல்லாச் செயல்பாட்டு அமைப்புகளுக்கும் சிந்தனை அமைப்புகளின் (think tanks) வழிகாட்டல்களும்,  ஆலோசனைகளும் அவசியம் என்பதைப் பல இயக்கங்களின் வாயிலாக நம்மால் அறிந்துகொள்ளமுடியும். இந்த அவசியத் தேவையைப் பார்வையற்றவர்களுக்காகப் பூர்த்திசெய்யத் தொடங்கியிருக்கிறது பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை. இந்த அமைப்பின் பெயரில் இருக்கும்முற்போக்குச் சிந்தனையாளர்என்ற தொடரேஅரசியலில் நாம்பகுதியில் இவ்வமைப்பை இடம்பெற வைத்திருக்கிறது.

எப்படி உருவானது பேரவை?
graphic முனைவர் கு. முருகானந்தன் அவர்களின் படம்
முனைவர் கு. முருகானந்தன்

      கள்ளக் குறிச்சி திருவள்ளுவர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கு. முருகானந்தன், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக  ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் . பூபதி, சென்னை தியாகராயர் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் U. மகேந்திரன், சென்னை பல்கலைக் கழகம் பச்சையப்பன் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் G. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கிச் செயல்படுத்தும் அமைப்பு இது.

        பார்வைக் குறையுடையோரிடையே முற்போக்குச் சிந்தனைகளை வளர்ப்பதும், முற்போக்கு இயக்கங்களோடு பார்வையற்றோரை ஒருங்கிணைப்பதும்தான் எங்கள் முக்கிய வேலைஎன்கிறார் பேரா. முருகானந்தன்.

graphic பேரா. பூபதி அவர்களின் படம்
பேரா. பூபதி

            பெரியார், அம்பேத்கர், மாக்ஸ் ஆகியோரது கொள்கைகளோடு ஊனமுற்றோர் இயலில் வரையறுக்கப்பட்டுள்ள முற்போக்குக் கருத்துகளைப் பார்வையற்றோருக்குள் விதைப்பதே இந்த அமைப்பு உருவாகக் காரணம்என்கிறார் பேரா. பூபதி.

       இதுவரை தங்களுக்குள் தலைவர், செயலர் என்று எந்தப் பொறுப்புகளையும் பிரித்துக்கொள்ளவில்லை, அதற்கான அவசியமும் எழவில்லை என்கிறார் பேரா. U. மகேந்திரன்.

graphic G. கார்த்திக் அவர்களின் படம்
G. கார்த்திக்

      தமிழில் இருக்கும் நம்மவர்களின் படைப்புகளையும், நம்மைப் பற்றிய படைப்புகளையும் ஆராய்வதும், ஆவணப்படுத்துவதும், பிற மொழிகளுக்குக் கொண்டு சேர்ப்பதும் எங்களது தலையாய பொறுப்புஎன்கிறார் G. கார்த்திக்.

      புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தில்தான் இந்த நால்வரணி உருவாகியிருக்கிறது. முற்போக்கு இயக்கங்களுடனான அறிமுகத்தை பேரா. முருகானந்தன் வழங்க, தற்போது வளர்ந்துவரும் ஊனமுற்றோர் இயல் (disability study) குறித்த அறிமுகத்தை வழங்கியிருக்கிறார் பேரா. பூபதி. இவர்கள் பார்வைக் குறையுடையோராக இருப்பதாலும், முற்போக்கு எண்ணங்கள் இவர்கள் மனதில் கிளை பரப்பியதாலும் உருவானதுபார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை’. 

பேரவை உருவாகக் காரணமான பெரியார்

      சில ஆண்டுகளுக்கு முன் விடியல் பதிப்பகம்பெரியார் இன்றும் என்றும்என்ற நூலை வெளியிட்டதும், அது தொடர்ந்து பல புத்தகக் கண்காட்சிகளில் விற்றுத் தீர்ந்ததும் நாம் அறிந்ததே. இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கவேண்டும் என்று நினைத்தது இந்த நால்வரணி. அப்போது எழுந்த கேள்வி இதை நாம் எப்படிப் படிப்பது?

        இந்தக் கேள்விக்கு விடையாக வந்தார் வாசிப்பாளர் கோமதி குப்புசாமி அவர்கள். அவரும், அவர் நண்பர்களும் இணைந்து இந்தப் புத்தகத்தை ஒலிப்பதிவு செய்து தந்தனர்.

      புத்தகம் முழுமையாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிறகு அது உணர்த்தும் வலிமையான கருத்துகளைப் பார்வைக் குறையுடையோர் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் நமக்கான பொதுத் தளத்தில் வெளியிடலாம் என்று தீர்மானித்தனர். அதோடு, இந்தப் புத்தக ஒலிப்பதிவிற்கு மேற்கொள்ளப்பட்ட கடும் உழைப்பைப் போற்றவேண்டும் என்றும், தங்களது இந்த வெற்றியைத் தொடரவேண்டும் என்றும் சிந்தித்ததன் விளைவாக முகிழ்த்தது  இந்தப் பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை.

      ஜூலை 14-2018 அன்று ஒலி வடிவில் வெளியானதுபெரியார் இன்றும் என்றும்நூல். அன்றுதான் உதயமானது பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை. 

தமிழகப் பார்வையற்றோர் உலகில் உருவான புரட்சிக்கான விதை

      சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இதற்கான விழாவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலர் பேரா. சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகப் பேச்சாளர் வெ. மதிமாறன் ஆகியோர் காணொலி மூலம் தங்கள் வாழ்த்துகளை வழங்கினர். பொதுத் தளத்தில் செயல்படும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் பார்வையற்றோர் தொடர்பான விழாவில் கலந்துகொள்வதும், சாதனைக்குரிய புத்தகத்தை வெளியிட்டிருப்பதும் பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் முதல் நாள் சாதனைகள்.

பெரியார் புத்தகம் வெளியிடுவது சாதனையா?

      இப்படி ஒரு கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கவேண்டும். ‘ஆமாம். இது ஒரு சாதனைதான்என்பதுதான் கேள்விக்கான பதில்.

      பெரியார் குறித்த வாழ்க்கை வரலாறு AICB நிறுவனத்தின் வெளியீடாகவும், IAB பிரெயில் அச்சகத்தின் வெளியீடாகவும் பிரெயிலில் கிடைக்கிறது. அவரதுபெண் ஏன் அடிமையானாள்நூல் மதுரை IAB பிரெயில்  அச்சகத்தால் பிரெயில் வெளியீடாக வந்திருக்கிறது. இவை தவிர, பெரியார் குறித்த சொல்லிக்கொள்ளும்படியான வேறு பிரெயில் புத்தகங்களோ, ஒலி நூல்களோ இல்லை.

      அதோடு, வாசிப்பு மையங்களிலும் (Reading centres) இத்தகைய புத்தகங்களை நம்மவர்களால் படிக்கமுடிந்ததில்லை. வாசிப்பு மையங்களுக்குச் சென்று, பாடப்புத்தகங்களையும், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களையும் படிப்பதற்கே நேரம் போதவில்லை என்பது உண்மையே. அதோடு, பெரியார் முதலிய புரட்சிகரச் சிந்தனையாளர்களின் புத்தகங்களைப் படிக்க வாசிப்பாளர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை என்பது பல பார்வை மாற்றுத்திறனாளி பயனாளிகளின் அனுபவம். இது குறித்து பேசிய பேரா. மகேந்திரன், குறிப்பிட்ட ஒரு வாசிப்பு மையத்தில் வாரம் தவறாமல்துக்லக்இதழ் படித்துக் காட்டப்படும் வழக்கம் இருந்ததைத் தெரிவிக்கிறார்.

graphic பேரா. U. மகேந்திரன் அவர்களின் படம்
பேரா. U. மகேந்திரன்.

       வாசிப்பாளர்களின் சார்பு நிலைக்கேற்ப வாசிக்க இயலாதவர்களாகிய நாம் மாறவேண்டிய கட்டாயம் இருந்ததை மறுக்கமுடியாது. அதே நேரம் வாசிப்பாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வால்தான் பல பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று நல்வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்என்கிறார் மகேந்திரன்.

      இத்தகைய சூழலிலிருந்து மாறுபட்டு வெளியாகியிருக்கிறதுபெரியார் இன்றும் என்றும்நூல்.

      நூலை வாசித்து ஒலிப்பதிவு செய்த 13 பேரில் 12 பேர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பணர்கள்.

        அவர்கள் இப்புத்தகத்தை வாசிப்பது குறித்து முதலில் யோசித்தாலும், முழு மனதோடு வாசித்தளித்தனர். தங்கள் கொள்கைக்கு மாறான ஒருவரின் சிந்தனைகளை எங்களுக்குத் தேவைப்படுகிறது என்ற ஒற்றைக் காரணத்திற்காக வாசித்தளித்த அவர்களுக்கு நன்றி. மேலும், வாசித்து முடித்த பிறகு பெரியார் கூறிய கடவுள் மறுப்பைத் தவிர, பிற அனைத்தையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றும், அவர் குறித்த ஆழமான புரிதல் ஏற்பட்டிருப்பதாகவும் வாசிப்பாளர்கள் தெரிவித்தனர்என்கிறார் பேரா. பூபதி. இப்போது சொல்லுங்கள் இது சாதனைதானே!

எதிர்ப்புக் குரல் கொடுத்த பேரவை

      தொடர்ந்து பேரவை மெல்ல மெல்ல தன் பணிகளை மேற்கொண்டது. தற்போது இந்திய ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் வரைவு சென்ற ஆண்டு வெளியிடப்பட்டபோது, அதில் இருக்கும் அபாயங்களை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியது பேரவை. தான் மட்டுமின்றி தமிழகத்தில் செயல்படும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பல அமைப்புகளை ஒருங்கிணைத்து, அவற்றின் கருத்துகளைத் தொகுத்து ஒன்றிய அரசிற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டது. இந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட பிறகும் தன் கருத்துகளைப் பல விதங்களில், பல்வேறு அமைப்புகளின் கருத்தரங்குகளில் எடுத்துரைத்துவருகிறது இப்பேரவை.

      ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016-இல் பெருவணிகர்களின் நலனுக்காக திருத்தம் மேற்கொள்ள  இந்திய ஒன்றிய அரசு முயன்றபோது, அதற்கென கருத்தரங்கை நடத்தி, தமிழகத்தில் செயல்படும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளை ஒருங்கிணைத்தது. தேசிய அளவில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ஒன்றிய அரசு தனது முடிவைக் கைவிட்டது. இந்தச் சிக்கலைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்து விழிப்புணர்வு ஊட்டிய பெருமை பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையையே சாரும்.

மாதம் ஒரு கருத்தரங்கம்

      கொரோனா ஊரடங்கு காலம் பல படிப்பினைகளை நமக்குத் தந்துளது. அதோடு, பல புதிய செயல்பாடுகளை வளர்த்துள்ளது. அந்த வகையில் இணையவழிக் கருத்தரங்கு நடத்தும் வழிமுறையைத் தமிழ் பேசும் பார்வையற்றோரிடையே அறிமுகப்படுத்தியது பா.மு.சி பேரவை. பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும், அவர்கள் மற்றவர்களால் பார்க்கப்படும் விதம் குறித்தும் மாதம் ஒரு தலைப்பில் இணையம் வழியாக கூடி ஒரு கருத்தரங்கை நடத்திவருகிறது இப்பேரவை. அது மட்டுமின்றி, தமிழகத்தில் இருக்கும் பிற பார்வையற்றோருக்கான அமைப்புகளுக்கும் தனது சூம் (zoom) அரங்கை வழங்கிவருகிறது.

விரல்மொழியரும் பா.மு.சி பேரவையும்

      பேரவை தொடங்கப்பட்ட நாள் முதல் விரல்மொழியர், பேரவையோடு பல நேரங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறது. பேரவையின் தொடக்கவிழா குறித்த கட்டுரை இதழில் இடம்பெற்றது. புதிய கல்விக் கொள்கை தொடர்பான பா.மு.சி பேரவையின் செயல்பாட்டில் நமது இதழும் கை கோர்த்திருந்தது. இதழின் 25-ஆம் இதழ் வெற்றிவிழாவிற்கு சூம் அரங்கை அளித்து மகிழ்ந்தது பா.மு.சி பேரவை. நமது இதழ் மட்டுமின்றி, பிற எல்லா முக்கிய அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக வளர்ந்திருக்கிறது பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை. அதனால்தான் 2 ஆண்டுகளாகச் செயல்படும் அமைப்புதான் என்றாலும், அது நமக்கான அமைப்புகள் பட்டியலில் முன்வரிசையில் நிற்கிறது.

 

      குறைந்த எண்ணிக்கையிலான செயல்பாட்டாளர்களைக் கொண்ட, கருத்தியல் ரீதியாக ஆழமாக இயங்கும் ஓர் அமைப்பு நமக்குப் புதுமையானது; அவசியமானது. இந்தியாவிலேயே இத்தகைய அமைப்பு இங்குதான் முதல்முறையாகத் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது தமிழகத்திற்குக் கிடைத்த பெருமை; நம் தலைவர்கள் வி்தைப்பிற்குக் கிடைத்த தரமான அறுவடை.

       பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் நிறுவனர்களான பேரா. முருகானந்தன், பேரா. . பூபதி, பேரா. U. மகேந்திரன், G. கார்த்திக் ஆகியோரோடு ஒரு மாலைப் பொழுதில் சூம் வழியே உரையாடினேன். அவர்கள் அவ்வுரையாடலில் அளித்த முக்கியக் கருத்துகள் அடுத்த இதழில்.

 

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையைத் தொடர்புகொள்ள: ptfbtn    @gmail.com

 

வாசகர்களே!

      உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.

 

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

 

 

6 கருத்துகள்:

  1. ஜெயராமன் தஞ்சாவூர்24 அக்டோபர், 2020 அன்று PM 2:34

    பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரயின்
    தோற்றத்தையும் வளர்ச்சியையும்
    அதன் சீரிய செயல்பாடுகளையும்
    இக்கட்டுரையில் சிறப்பாக எடுத்துரைத்துள்ள
    திரு பாலகணேசன் அவர்களுக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
    பேரவை உயர்ந்தோங்கி வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. விரல் மொழியர் கொடுத்திருக்கிற இந்த அங்கீகாரத்திற்கு என் சார்பிலும் எங்கள் பேரவை சார்பில் நெஞ்சார்ந்த நன்றி. இதுபோன்ற அங்கீகாரம் கண்டிப்பாக எங்களை களத்தில் தொடர்ந்து துடிப்போடு இயங்க வைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நாங்கள் எடுக்கும் முயற்சி எவ்வாறு மக்களால் அணுகவும் புரிந்து கொள்ளவும் படுகிறது என்பதை அனுமானிக்க இந்த கட்டுரை மிக முக்கியமான வடிகாலாக அமைந்திருக்கிறது என்பதை எண்ணிப் மகிழ்ச்சி கொள்கிறோம். செயல்களுக்கு பல அமைப்புகள் சிறப்போடு பணியாற்றிக் கொண்டிருக்க சிந்தனையை செப்பனிட நமக்குள் கொள்கை பிடிப்பு மிக்க ஒரு அமைப்பு அவசியம் என்பதே எங்களின் நோக்கம் என்பதை அழுத்தமாக பதிய வைத்திருக்கிற உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மீண்டும். இதனை எழுத நீங்கள் இட்டிறுக்க கூடிய உழைப்பை நினைத்துப் பார்த்து உங்களை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் நன்றியொடு.

    பதிலளிநீக்கு
  3. பா.மு.சி பேரவை சமூகத்தின் புதிய பரிமாணத்திற்கான தொடக்கம்.
    வளரட்டும் பேரவையின் செயல்பாடுகள்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. விரல்மொழியரின் இந்த அங்கிகாரத்திர்க்கு மிக்க நன்றி. இது மேலும் மேலும் எங்களை முற்போக்கு தளத்தில் பயணிக்க வைக்கும். பாராட்டி பதிவிட்ட அனைவருக்கும் எங்களது பேரவையின் சார்பாக நன்றி.

    பதிலளிநீக்கு
  5. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு