தலையங்கம்: தழைக்கட்டும் சமூகநீதி

graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்
 

        இட ஒதுக்கீட்டின் பயனாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் பலர்
ஆசிரியர்களாக, அரசுப் பணியாளர்களாகப் பணியேற்றுத் திறம்படச்
செயலாற்றிவருகின்றனர். அவர்களுக்குப் பொது உலகில் அங்கீகாரமும்,
பொருளாதார பலனும் இதனால் கிடைக்கிறது.
        அதே வேளையில், இட ஒதுக்கீட்டின் பயனைப் பொருளாதார பலன்
என்பதோடு சுருக்கிவிடமுடியாது. இட ஒதுக்கீடு என்பது அதிகாரப்
பரவலாக்கம். எல்லாச் சமூகத்தினரும் அதிகாரத்தில் பங்கேற்பதுதான் ஒரு
மக்களாட்சி நாடு கடைப்பிடிக்கும் உயர்ந்த விழுமியமாக இருக்கமுடியும்.
அதற்கான வழியாக நம் வழிகாட்டிகள் தேர்ந்தெடுத்த முறைதான் இட
ஒதுக்கீடு. இதனை, ‘இடப் பங்கீடு’ என்ற தொடராலேயே குறிக்கவேண்டும்
என்று சிலர் வாதிடுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சமூக நீதி காக்கும் இத்தகைய இட ஒதுக்கீட்டினைச் செயல்படுத்தும்
முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்பதும் இந்திய அரசியல்
தெரிந்த யாரும் மறுத்துவிடமுடியாத கூற்று.
        அதன் நீட்சியாக, மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கடந்த ஆண்டு உச்சநீதி்மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுகீடு வழங்கப்படவேண்டும்.
        ஏற்கெனவே தமிழக அரசு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென அடையாளம் கண்டுள்ள பிரிவு A முதல் D வரையிலான 234 பணிகளுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.
        இந்தியாவிலேயே அதிக பணிகளைப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென
அடையாளம் கண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பது பெருமைக்குரிய
செய்தி. அதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள பணிகளில் பெரும்பாலானவை குறைபார்வையுடையவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
        பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம், பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம், பார்வையற்ற அரசுப் பணியாளர்கள் சங்கம் முதலிய நமக்கான அமைப்புகள் இது குறித்துத் தொடர்ந்து தமிழக அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
        பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்
அரசாணையைத் தமிழக அரசு வெளியிட உழைப்போம்! தமிழகம் சமூக நீதி
மண் என்ற பெருமையைக் காப்போம்!

4 கருத்துகள்:

  1. நிச்சயமாக இட ஒதுக்கீடு பிரச்சனைகளில் நம்முடைய சங்கங்கள் குரல் கொடுக்கும். அதேபோன்று நம்முடைய சமூகம் சார்ந்து இயங்கும் இதுபோன்ற ஊடகங்கள் மேற்கண்ட பிரச்சினைகளை திரும்பத்திரும்ப பேசி எழுத வேண்டும். ஏனெனில் மறதி மக்களின் இயல்பு.

    பதிலளிநீக்கு
  2. மஉக்கஇயமான பிரச்சனை கைகோர்த்து உழைப்போம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான சிந்தனை நிச்சயம் தொடர்ந்து உழைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அவசியமான ஒன்றுதான்.
    சங்கங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதே வேளையில் பணிபுரியும் பார்வையற்றவர்கள் தான் "நமது சமூகத்தின் ஒரு அடையாளம்" என்பதை மனதிற்கொண்டு, சவாலினை சமாளித்து, பணிபுரிய வேண்டும். முழு பார்வையற்றவர்களுக்கு இன்னும் பல தொகுதி எ மற்றும் ஆ பணியிடங்கள் கண்டறியப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு