ராகரதம்: ஒவ்வொரு பாடலிலும் - க. மணிவண்ணன்


graphic உன்னிகிருஷ்ணன்
               2000- ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளேதிரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலிலும்என்ற பாடலைக் குறித்து இப்பகுதியில் எழுதவிருக்கிறேன். மாதவன், சிநேகா இணைந்து நடித்த இப்படத்தின் இயக்குநர் ஜெ. சுரேஷ். இசையமைப்பாளர் எஸ்.. ராஜ்குமார். பாடலை எழுதியவர் வைரமுத்து.

       இந்தப் பாடல் வெளியானபோது நான் 9-ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். நண்பர்களோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த காலம் அது.  இந்தப் பாடல் என் மனதைத் தொட்டதால் அடிக்கடி நான் பாடுவதுண்டு .

       பள்ளிக்கு யாரேனும் சிறப்புச் செய்யவோ, நன்கொடை வழங்கவோ வந்தால்  உடனடியாக எனது ஆசிரியர் என்னை அழைத்து இந்தப் பாடலைப் பாடச்சொல்வார்.  நான் இந்தப் பாடலைப் பாடும்போது ஒருமுறை ஒரு நன்கொடையாளர் எனக்கு 5000 ரூபாய் கையிலேயே வைத்து அழுத்தினார். “ஐயா! எனக்கு சன்மானம் எல்லாம் வேண்டாம்என்று கூறினேன். பள்ளி நிர்வாகத்தினர்அமைதியாக இரு தம்பி. அவர்களை அவமதிக்காதேஎன்று சொன்னது. எனவே அமைதியாக இருந்துவிட்டேன். எனினும், பாடல் பாடி பணம் பெறுவது என்பது எனக்குக் கொஞ்சம் நெருடலாகத் தான் இருந்தது.

       முதல் முறை நான் அதைப் பெற்றதால் எனது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். நமது பாடலுக்கு எவ்வளவு மதிப்பு என்று தோன்றியது. நிச்சயமாக ஒரு பாடகனாக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனினும், “உனக்குப் படிப்பு வரவில்லை என்றால் உன் யோசனை சரி. நன்றாகப் படிக்கிறாய். எனவே அதை மறந்துவிடுஎன்று எனது ஆசிரியர் அறிவுரை கூறிய பிறகு  அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.

       இப்பாடலில், “பள்ளிநாள் உறவுகளைப், பழைய நாள் நினைவுகளைப் பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சேஎன்ற வரி வரும். அந்த வரியை எப்போதெல்லாம் கேட்கிறேனோ, அப்போதெல்லாம் எனது நண்பர்களையும், எனது தொலைந்துபோன நினைவுகளையும் மீட்டெடுக்க அது ஒரு பாலமாக இருந்துவருகிறது.

       இரண்டு வகையாக பாடலைக் கொடுத்திருப்பார்கள். ஒன்று மகிழ்ச்சியான பாடல். மற்றொன்று சோகமான பாடல். இரண்டையும் உன்னிகிருஷ்ணன் தான் பாடியிருப்பார்.
சோகமான பாடலில்,
       எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
       வாழ்க்கை போல எண்ணம் கொள்; வாழ்வது துயரமில்லை
       எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு.
        ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு”, என்று வரும் வரிகள் மனதை மிகவும் தொட்டன.

       பிற பாடகர்களைப் போல இல்லாமல், உன்னிகிருஷ்ணன் அவர்களின் குரல் மிகவும் மென்மையாகவும், நம்மை வருடும் முறையிலும் இருக்கும். அவர் கர்நாடக இசையில் கைதேர்ந்தவர் என்றாலும், மென்மையான திரையிசைப் பாடல்களைப் பாடும் விதம் வியக்கும் வகையில் இருக்கும். அவர் குரலில் நான் மட்டுமா மயங்கி நிற்கிறேன்?
பாடலைக் கேட்க...
(கட்டுரையாளர் விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர்)
தொடர்புக்கு: kannanmanivannan@gmail.com

4 கருத்துகள்:

  1. சிறப்புக்குரிய பாடல் ஒன்றினை அனுபவத்தோடு அறிமுகப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய கட்டுரையை படித்துவிட்டு பதில் அளித்த பேராசிரியர் மகேந்திரன் ஐயா அவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன் அய்யா அவர்களுக்கும் நன்றி மணிகண்டன் ஐயா அவர்களது பணியை எனக்கு வழங்கியிருந்தார்கள் அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
  3. ஜெயராமன் தஞ்சாவூர்7 ஜூன், 2020 அன்று PM 12:36

    Editing, ஒரு பாடலின் மூலம்

    கடந்த கால அனுபவத்தை எழுதி,

    நிகழ்காலத்தில் எமக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டீர்கள்

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் , Edit box, உங்கள் கருத்தை உள்ளிடுக...

    பதிலளிநீக்கு