கவிதை: மேதைகள் - தீனா எழிலரசி

graphic காதலனும் காதலியும் கைகோர்த்தபடி நடந்து செல்லும் படம்

நாலடிக் குச்சி வீசி

என் நாயகன் நடந்துவர

நாணத்தில் நான் மயங்க

வீர நடை போட்டு வந்து

வில்லவனின் வாசனை திரவியம்

விர்ருன்னு இழுக்கையிலே! 

 

அவன் வாயின் வார்த்தைகளோ

வைரமுத்தாய் ஜொலிச்சதுங்க.

மேடையிலே அவன் நிற்க

என் மேனி சிலிர்க்கதுங்க.

என்வனின் கையிலுள்ள

ஒலி வாங்கியும் அவன் உடலும்

ஒன்றே போல் மெலிந்ததுங்க.

 

அவன் என்னைச் சுமப்பானா?

நான் அவனைச் சுமப்பேனா?

என்ற கனவுகள் மெய்ப்பட

இல்லை இல்லை

இரு மனங்களும் இணைந்தே

தமிழ்ச்சமூகம் தழைத்தோங்கத்

தளராமல்

வீரநடை வெற்றிநடை

போடணுமுன்னு எண்ணங்கள் ஓடையில

என் காதில் வந்து பாய்ந்ததுங்க

அனைவருக்கும் வணக்கமு’ன்னு. 

என்னவனின் குரலோசை

என்னை இழுத்ததுங்க.

 

இப்படியே நாட்கள் நகர

தூக்கம் கலைய

துள்ளி எழுந்தேனுங்க.

கோட்டை இரயில் நிலையத்தில்

தனி ஈழம், தமிழ் தேசம்,

ஆம்பூர் தொழிலாளர் போராட்டம்,

பெண் உரிமை, சமத்துவம்,

ஆண்கள் மீதான எனக்கிருந்த பார்வைன்னு

பல கருத்துகள் பரிமாறி

ஓரிரு முறை சந்தித்தோம்.

கனவில் அல்ல;

கனவே நிகழ்வாயிற்று.

 

அப்படியே

நாயகனின் சந்திப்பும்

நாளடைவில் நலிவடைய

வருடங்கள் வரலாயின.

 

வாசித்த வள்ளுவனை

வாழ்க்கை உணரவைத்த வள்ளுவனைப்

பொதுமறை தந்த புண்ணியனைக்

கன்னியாகுமரியில்

கண்குளிரக் கண்டுவிட்டுப்

பஞ்சு மெத்தையினில் பைங்கிளி

பாங்குடனே உறங்கையிலே

காதலனின் நினைவோடு

கன்னியவள் கண்விழிக்க

கத்தும் குரலோடு

கைபேசி அலறியது.

 

ஹலோ காதலி இல்லை, இல்லை இணையர்’

என்றெண்ணி எண்ணங்கள் சிறகடிக்க

அல்லி ‘வணக்கமு’ன்னு

காற்றலையில் காதலை

அமுதனின் காதினில் பாய்ச்சினாள்

மறு பொழுது விடியலே

மன்னா உன் முகம் காணனும்

என்னவனின் பதிலுக்காய் ஏங்கையிலே

என்னென்று இருமுறை வினவ

மௌனமே மறு முனையில் பதிலாயின.

 

வள்ளுவனை வலம் வந்த மகிழ்வோடு

என்னவனின் எழில் முகத்தை

உள்ளூர நினைக்கையில்

உறக்கம் வந்து தழுவியது

தென்றல் வந்து தீண்டியது

விடியல் வந்துவிட்டதென்று

மண்ணுலகம் வந்துவிட்டேன்

மகிழ்நனை பார்ப்பதற்கே

 

கூஊஊஊ என்ற ஒலியோடு

ரயில் ஓடி  நின்றது.

எட்டிப் பார்க்கையில்

பட்டணம் தென்பட்டது.

தோன்றிய பொய்களைத்

தோழியரிடம் கூறி விட்டு

அன்பு வணக்கம் கூறி

விடை பெற்றேன் அனைவரிடமும்.

அவன் அருகாமை இருக்கையில்

பொய்யென்றும் அறியேனே!

 

ரயில் நின்றது தி.நகர் நிலையத்தில்.

பெட்டியைத் தூக்கிக் கொண்டு

பரபரப்பாய் இரங்கையிலே

‘அல்லி’ என்றழைக்க,

 திரும்பி நான் பார்க்க

என்னவனின் கை ஒன்று

பெட்டியைச் சுமக்க

மற்றொரு கரம்

என்னைப் பற்றியது

சந்திப்பும் சிந்திப்பும்

ஏறுமுகமாய் இருக்கலாயின

 

என் கையில் உள்ள அலைபேசி

கத்தும் குரல் ஓசை

என் காதில் வந்து பாய்ந்தது

‘போகணும்டி பட்டணமு’ன்னு பாங்காய் அவன் உரைக்க

மார்பில் விழுந்த அடி மண்டையில் ஒரைச்சதுங்க.

கவர்மெண்ட் வேலை புள்ள’

 

நாம் காணா ஞாலத்தில் 

ஜென்னி-மார்க்ஸாய்

ஜோதிராவ்-சாவித்திரிபாய் பூலேவாய்

மானுடம் தழைக்கச் செய்ய

மக்கள் சனநாயகம் மலர்ந்திட

மர்ம முடிச்சு அவிழ்க்கனும்.

அந்நாள் எந்நாளோ என்றேங்க

இதோ மணமேடையில் இணைகின்றனர்

மாமேதைகளாய் உறுதியுடன்

‘இயற்கையைப் பாதுகாப்போம்.

மனிதகுலத்தை விடுவிப்போம்’.

 

(கவிஞர் இராணிப்பேட்டை மாவட்டம் அமூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர்)

தொடர்புக்கு: dheenaezhilarasi@gmail.com

4 கருத்துகள்:

  1. ஜெயராமன் தஞ்சாவூர்.24 அக்டோபர், 2020 அன்று PM 1:35

    கற்பனை நயத்துடன் வந்த கவிதை

    அழகு

    பதிலளிநீக்கு
  2. அனுபவத்தை கவிதையாய் வடித்து தந்து ரசிக்க வைத்த உங்கள் கவி முயற்சியை மனதாரப் பாராட்டுகிறேன் வாழ்க வளர்க

    பதிலளிநீக்கு
  3. கவிதை மிக அருமை
    கவிஞருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அறிவு சுரங்கத்தை தோண்டி கொண்டிருக்கிற விரல் மொழியார் அமைப்புக்கு என் வாழ்த்துக்கள் வணக்கங்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு