தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து.

graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்

       ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயகக் கடமையாற்றுவதற்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது. வரும் ஏப்ரல் 6 அன்று தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகள் தீர்மானிக்கப்படவிருக்கிறது.

            18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் சமமாக வழங்கப்பட்டிருக்கும் ஜனநாயக உரிமை வாக்களித்தல். அக்கடமையை நிறைவேற்ற மறந்துவிடாதீர்கள்.

      இந்தத் தேர்தலில் வழக்கம் போலவே மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பல சிறப்பு ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 

      ஏற்கெனவே விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்குத் தபால் வாக்கு வழங்கும் திட்டம் இந்தத் தேர்தலில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

      பார்வையற்றோர் வாக்களிக்க வழக்கம் போலவே பிரெயில் சீட்டுகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சாவடியிலும் வேட்பாளரின் பெயர், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி ஆகியவை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பிரெயில் சீட்டுகள் வழங்கப்பட்டிருக்கும். சாவடிக்குச் செல்லும் பார்வை மாற்றுத் திறனாளி  அப்பட்டியலைத் தெளிவாகப் படித்துக்கொள்ள வேண்டும். அப்பட்டியலில் தனக்குப் பிடித்த வேட்பாளரின் வரிசை எண்ணை மனதில் போட்டுக்கொண்டு வாக்களிக்கும் இடத்திற்குச் செல்லவேண்டும். வாக்குப்பெட்டியில் வாக்களிக்கும் பொத்தான்களுக்கு அருகிலேயே பிரெயில் எண்கள் பொருத்தப்பட்டிருக்கும். மனதில் வைத்த எண் எங்கிருக்கிறது எனத் தேடி, அதன் அருகில் இருக்கும் பொத்தானை அழுத்தி, சில நொடிகளில் வரும்பீப்ஒலியைக் கேட்டுவிட்டால் நீங்களும் சுயமாக வாக்களித்துவிட்டீர்கள்.

      இது தவிர, தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்திலும் ஒவ்வொரு தொகுதிக்கான வேட்பாளர் விவரம் வரிசையாகத் தரப்பட்டிருக்கும். அதில் இருக்கும் வரிசை எண்ணை நினைவில் வைத்துக் கொண்டும் நாம் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கலாம்.

      இவற்றைப் பயன்படுத்த முடியாத பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளரை அழைத்துச் செல்லும் வசதியும் இருக்கிறது. எனவே அனைவரும் தவறாது வாக்களியுங்கள்.

      கடந்தகால அரசுகளின் செயல்பாடுகளையும், எதிர்கால உறுதிப்பாட்டையும் கணக்கில் கொண்டு வாக்களியுங்கள். இந்த முறை தமிழக தேர்தல் நிறைய வாய்ப்புகளைத் தருகிறது.

      ஆளும் கட்சி, பிரதான எதிர்க் கட்சி ஆகியவற்றோடு, மாற்றம் என்ற பெயரில் பல தெரிவுகள் வாக்காளர்களுக்குக் கிடைத்துள்ளன. இவை தவிர சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்பர். இவர்களில் யாருமே பிடிக்கவில்லை என்போருக்கு ‘NOTA (none of the above)’ என்ற தெரிவும் இருக்கிறது. இவற்றில் ஒரு தெரிவிற்குக் கட்டாயம் வாக்களியுங்கள்.

      வாக்களிப்பதில், தேர்தல் தொடர்பான பிற செயல்பாடுகளில் ஐயங்கள் இருந்தால், 1950 என்ற தேர்தல் ஆணைய எண்ணுக்கு அழைத்துப் பேசுங்கள்.

      நமக்கான வசதிகளைப் பயன்படுத்தி, அதில் உள்ள குறைகளைக் களைய நம் ஜனநாயகப் பங்களிப்பை உறுதிசெய்வோம்.

       வாசகர்களே! விரல்மொழியரின் 32-ஆவது இதழ் தேர்தல் சிறப்பிதழாக வெளிவருகிறது. தேர்தல் தொடர்பான சில முக்கியப் படைப்புகள் இதழில் இடம்பெற்றுள்ளன. படித்துப் பயன் பெற அழைக்கிறோம்.

4 கருத்துகள்:

  1. கடமையைச் செய்ய காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. வெல்லப் போவது யாரு என்கிற எதிர்பார்ப்போடு ஓட்டளிக்க வேண்டிய தேதி ஆறு ஓட்டுகள் எண்ணப்படும் நாள் வரை காத்திருப்பதில் தான் இருக்கிறது சிறு தகராறு, மனம் கிடந்து தவிக்குமே யார் வெற்றி பெற்றது என்பதை எண்ணிப்பாரு, இருந்தாலும் காத்திருப்போம் மே இரண்டு மாலை வரை அன்றுதான் செம ஜோரு! ,

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் கடமையை செவ்வனே செய்ய காத்திருக்கிறோம் தங்களது ஆழமான தெலிவான தகவல்கலுக்கு என் மணமாற்ந்த வாழ்த்துக்கல் நன்றி sir

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா என்னுடைய பெயர் முநியபில்லை நான் இளங்கலை ஆங்கில மூன்றாமாண்டு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தஞ்சாவூரில் படித்து வருகிறேன் அதாவது இந்த முறை தேர்தலில் வெற்றி பெறப்போவது ஆளுங்கட்சியான தே இல்லை இதுதான் நிதர்சனமான உண்மை ஏனென்றால் குரானா பரவலின் காரணமாக தேர்வுகள் இணையவழியில் நடந்தது அதில் அறிவிப்புகள் வெளியிட்டாலும் நான் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை பற்றி எந்த கட்சி காரர்களும் காதில் போட்டுக்க வில்லை யாரும் நமக்காக குரல் கொடுக்கவில்லை இதுதான் நிதர்சனமான உண்மை அப்படி இருக்கும் வகையில் இம்முறை நாம் ஓட்டுப்போட்டு நாம் வெற்றிபெற வேண்டும் அவர்களை நாம் தேர்ந்தெடுத்தால் அவர்கள் நமக்கு செய்வார்கள் என்று நாம் எப்படி நம்ப வேண்டும் அப்படி நாம் நம்பினால் நம் நம்பிக்கையை வீணாக போய் விடாதா.

    பதிலளிநீக்கு