அலசல்: தேர்தல் களத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன்:

ப. சரவணமணிகண்டன்

graphic இந்தியத் தேர்தல் ாணையத்தின் சின்னம்

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம். மார்ச் 10ஆம் தேதிதான் இந்தியாவின் 17ஆவது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது என்றாலும், அதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஓராண்டாகவே நடந்துவந்தன. முந்தைய பொதுத்தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் சம பங்கேற்புடன் வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகம் கவனத்தில் கொண்டு செயல்பட்டது. அவ்வாறு மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் முன்னெடுத்த நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

  பிரெயிலில் வாக்காளர் அடையாள அட்டை


இந்தத் தேர்தலில் பார்வை மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு பிரெயிலில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப் பரிசிளிக்கப்படும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு பார்வையற்றோரிடையே பலத்த வரவேற்பை பெற்ற அதேசமயம், இதற்கான சாத்தியங்கள் குறித்தும் அவர்களிடையே பல்வேறு விவாதங்கள் கிளம்பின.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் பதிவாகியிருந்த 1,086 பார்வையற்ற வாக்காளர்களில் பரிசோதனை அடிப்படையில் 46 பேருக்கு பிரெய்ல் வாக்காளர் அடையாள அட்டையை புதுச்சேரி தேர்தல் அலுவலகம் தயாரித்தது. பிரெய்ல் புள்ளிகள் ஒளிபுகும் ஸ்டிக்கர்களில் (Transparent Stickers) அச்சடிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையில் ஒட்டப்பட்டிருந்தது.

முன்பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர், பிறந்த தேதி, வயது ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. பின்பகுதியில் வாக்குச்சாவடி எண், தொகுதி பெயர், எண் ஆகிய தகவல்கள் பிரெயிலி அச்சடிக்கப்பட்டிருந்தன. பிரெய்ல் வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வழங்கினார்.

பிரெயிலில் பூத் ஸ்லிப்



graphic பிரெயில் பூத் ஸ்லிப்

 பிரெயிலில் வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிச்சார்த்த முயற்சியாகும். ஆனால், நாடெங்கும் உள்ள பார்வையற்றோருக்கு பிரெயில் பூத் ஸ்லிப் வழங்கப்படும் என்கிற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பார்வையற்றோரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பூத் ஸ்லிப்புகளை  பிரெயிலில் அச்சடிக்கும் பொறுப்பு இந்தியாவில் செயல்படும் சில பார்வையற்றோருக்கான அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தேசிய பார்வையற்றோருக்கான அதிகாரமளித்தல் மையத்தின் மண்டலப்பிரிவு சென்னை, இராமகிருஷ்ணா வித்யாலாயா கோவை மற்றும் இந்தியப் பார்வையற்றோர் சங்கம் மதுரை ஆகிய நிறுவனங்களின் பிரெயில் அச்சகங்களில் இதற்கான பணிகள் நடந்தன.

தமிழகத்தில் பிரெயில் பூத் ஸ்லிப் வழங்கும் நடவடிக்கைகள் மாநிலத்தில் தேர்தல் நடக்கவிருந்த ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பார்வை மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அவரவருக்கான பிரெயில் வாக்குச்சாவடி சீட்டுகளை சரியாக வினியோகிக்கும் நோக்கோடு, அந்த சீட்டுகளில் வாக்காளரின் வாக்குச்சீட்டு எண்ணை மட்டும் சாதாரண எழுத்துகளில் எழுதுகிற பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அலுவலர்களுக்கு உதவும் வகையில், பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் மூவரும் இதில் பங்கேற்றனர். அந்த ஆசிரியர்களில் ஒருவரும், ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவருமான செல்வி U. சித்ரா அவர்கள் நம்மிடம் கூறியது, “தேர்தல் ஆணையத்தின் பிரெயில் வடிவிலான பூத் ஸ்லிப் வழங்கும் நடவடிக்கை வரவேற்புக்குரியது. தொகுதி விவரம், வாக்காளரின் விவரம் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தொடர்பான தகவல்கள் என அனைத்தையும் முதன்முறையாகப் பிரெயிலில் தடவிப்பார்த்தது பெருமிதமும் பூரிப்புமாக இருந்தது. அனைத்து விவரங்களும் பிரெயிலில் இருந்ததால், சாதாரண பூத் ஸ்லிப் போல் அல்லாமல், இந்த பிரெயில் பூத் ஸ்லிப் சற்று அளவில் பெரியதாக இருந்தது” என்றார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி  உரிய காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையிலே இருந்த பார்வை மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும்கூட பிரெயிலில் அச்சடிக்கப்பட்ட பூத் ஸ்லிப்புகள் வினியோகிக்கப்படவில்லை. மேலும் இதுபோன்ற புதுமையான முயற்சிகள் அதன் முதற்கட்ட அமலாக்கத்தில் சில இடர்பாடுகளைச் சந்திக்கும் என்றாலும், எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகள் சிறப்பான வெற்றியைப் பெறும். அதற்கான முயற்சியில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இடுபட வேண்டும். பார்வை மாற்றுத்திறனாளி அமைப்புகளும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தன்னார்வத்தோடு முன்வந்து தேர்தல் ஆணையத்தின் கரங்களை வலுப்படுத்திட வேண்டும்.

பிரெயில் புள்ளிகள் பொறிக்கப்பட்ட வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம்


  graphic பிரெயில் புள்ளிகள் பொறிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம பங்கேற்புடன் வாக்களிக்கும் வகையில் கடந்த 2009 முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் பிரெயில் முறையில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கு அருகில் அவர்களுக்கான எண்கள் வரிசையாக பிரெயில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டிருக்கும். வாக்களிக்கும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு பிரெயில் வடிவிலான வேட்பாளர் பட்டியல் (ballot sheet) வாக்குச்சாவடியில் வழங்கப்படும். அதில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் வரிசை எண்ணை அறிந்துகொள்ளும் அந்தப் பார்வை மாற்றுத்திறனாளி, மின்னணு வாக்கு இயந்திரத்தில் அந்த எண்ணைத் தடவிப்பார்த்து, உறுதிசெய்துகொண்டு, தனது வாக்கினைச் செலுத்துவார்.     

 இந்த நடைமுறையின்படி, பிரெயில் முறையில் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வேட்பாளருக்கான வரிசை எண்களாக மின்னணு இயந்திரத்தில் ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, ஒரு மின்னணு வாக்கு இயந்திரத்தில் 1 முதல் 16 வரை அந்தந்த வேட்பாளருக்கு நேராக அவை ஒட்டப்பட்டிருக்கும். போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 16ஐ தாண்டினால், அடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்தில் 17 முதல் எண்கள் தொடங்கும். வாக்கு இயந்திரங்களின்  மேல் பகுதியில், பிரிவு 1 (Ballot Unit I) பிரிவு 2 (Ballot Unit II) என பிரெயிலில் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். ஒருவேலை எனது தெரிவு 20ஆக இருக்கும் பட்சத்தில் நான் இரண்டாவது வாக்கு இயந்திரத்தில் 20 எண்ணைத் தடவிப்பார்த்து, என் வாக்கைச் செலுத்த முடியும். தேர்தல் ஆணையத்தின் இந்தநடைமுறை பார்வையற்றோர் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.   

 இந்த நடைமுறைதான் இந்தத் தேர்தலிலும் தொடரும் என்ற எண்ணத்தோடே, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பிரெயில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது குறித்த செய்முறை நிகழ்விற்காக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நானும் சக ஆசிரியர் திரு. பாஸ்கர் அவர்களும் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் கண்டது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அங்கு மின்னணு இயந்திரங்களில் பிரெயில் ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக எண்கள் அப்படியே அந்த இயந்திரத்திலேயே (Engraved) பொறிக்கப்பட்டிருந்தன. அதாவது, எல்லா இயந்திரங்களிலும் 1 முதல் 16 என்பதாகவே அந்த எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அதாவது, 25ஆவது வரிசை எண்கொண்ட ஒரு வேட்பாளரை பார்வையுள்ள நபர் எளிதில் 25 என்ற எண்ணை வைத்து அடையாளம் காண இயலும். ஆனால், அதே 25 வரிசை எண்கொண்ட வேட்பாளரை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தேடினால், 2ஆவது இயந்திரத்தில் அந்த எண்  இருக்காது. அந்த இயந்திரத்திலும் 1 – 16 வரைதான் இருக்கும். எனவே ஒரு பார்வை மாற்றுத்திறனாளி 25 என்பதற்குப் பதிலாக 25-16=9 என்று கணக்கிட்டு, அவர் வாக்கைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள பிரெயில் ஸ்டிக்கர்களில் புள்ளிகள் அத்தனை தரமானதாகவும் இல்லை என்பது மற்றொரு குறைபாடு. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த பிரச்சனையை தேர்தல் ஆணையரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாகச் சொன்னார்கள்.

மேற்கண்ட இந்தப் பிரச்சனை கடந்த 2017ல் நடைபெற்ற R.K. நகர் தேர்தலிலும் எதிரொளித்ததன் விளைவாக, இந்தமுறை தேர்தல் ஆணையம் ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்திருந்தது. அதாவது, வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில் பிரெயில் புள்ளிகள் பொறிக்கப்பட்டுவிட்டதால் அந்த மின்னணு இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரெயிலில் வழங்கப்பட்ட வேட்பாளர் பட்டியலிலும் அதே வரிசை முறையில் வேட்பாளர் எண்கள் வழங்கப்பட்டிருந்தன. அதாவது, ஒன்றிற்கு மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட தொகுதிகளில் பிரெயில் வேட்பாளர் பட்டியலும் முதல் இயந்திரம் (ballot unit 1) இரண்டாம் யந்திரம் (ballot unit 2) எனப் பிரித்து தலைப்பிடப்பட்டு, வேட்பாளர்களின் வரிசை எண்கள் 1-16 வரை பிரெயிலில் அச்சடிக்கப்பட்டிருந்தன.

பிரெயிலை முன்னிலைப்படுத்திய தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் தேர்தல் தினத்தன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் சம பங்கேற்புடன் தங்கள் வாக்கைச் செலுத்தினார்கள். ஓரிரு இடங்களில் பிரெயிலில் வேட்பாளர் பட்டியல் வழங்கப்படவில்லை என்பது போன்ற சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால், மாற்றுத்திறனாளிகளின் சம வாய்ப்பை உறுதி செய்வதாகவே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தன.

கட்சிகள் கவனத்தில்கொண்ட மாற்றுத்திறனாளிகள் நலன்

கடந்த தேர்தல்களைப் போலல்லாமல், இந்தமுறை கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளின் நலன் குறித்து தங்களின் பார்வையை சிறிதும் பெரிதுமாக வெளிப்படுத்தியிருந்தது புதிய முன்நகர்வாகப் பார்க்கப்பட்டது. இந்திய கம்நியூஸ் கட்சி மாக்சிஸ்ட் தனது தேர்தல் அறிக்கையை ஒலிவடிவில் வெளியிட்டது பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே வரவேற்பைப் பெற்றது.

ஊராட்சி ஒன்றியந்தோரும் ஒரு சிறப்புப் பள்ளி அதிரடித்த சிபிஎம் தேர்தல் அறிக்கை

graphic சிபிஎம் கட்சி சின்னம்


இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாக்சிஸ்ட் தேசிய அளவில் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான  சில அறிவிப்புகளை வழங்கியிருந்தது. அதுபோலவே, சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவும் தனது தேர்தல் அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலன் எனத் தலைப்பிட்டு, சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அவை:
• பாகுபாடு பார்ப்பதை தடை செய்யும் அரசியல் சாசன பிரிவு 15 ( 1 ) ல் " ஊனமுற்றோரை " சேர்க்க வலியுறுத்துவது , அதைப்போன்று அரசு பணியமர்த்தலில் சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன பிரிவு 16 (2)ல் “ ஊனமுற்றோரை " சேர்ப்பது.
• மாற்றுத்திறனாளிகளுக்கான தடையில்லா சூழல் உள்ளிட்ட சட்டபூர்வ அரசு கடைமைகளை செய்ய ஒவ்வொரு துறையும் தனது நிதிச்செலவினத்தில் 5 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்வது பொதுக்கல்வித்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி - உள்ளடங்கிய கல்வியை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு சிறப்புப் பள்ளியை ஏற்படுத்துவது
• மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களாக அறிவித்து , அரசுகளின் நலத்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிபந்தனையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வது
• மாற்றுத்திறன் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசுகளின் அனைத்துத் திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க நடவடிக்கை இவர்கள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் தடுத்திட நடவடிக்கைகள் எடுப்பது. மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ; கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சட்டப்படியான 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வது , மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையான சைகை மொழிக்கு அங்கீகாரம் வழங்குவது ; தனியார் துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது
• மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விலைவாசி உயர்வுக்கேற்ப உயர்த்தப்பட்டு தடையின்றி வழங்குவது.' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக தேசிய அளவில் வெளியிடப்பட்ட சிபிஎம் தேர்தல் அறிக்கையிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவை;
• மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் மற்றும் இதர சட்டங்கள், ஐநாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் பிரகடனத்தின்படியும், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளைக் கணக்கில்கொண்டு, திருத்தம் செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்.
• மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெறுவது எளிமையாக்கப்பட்டு, ஒரே வகையான அனைத்து மாநிலங்களிலும் செல்லத்தக்கதான மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கப்படும்.
• உரிய காலகட்டத்திற்குள் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்ற பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
• அனைத்துக் கட்டடங்கள், பொது இடங்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற அனைத்தும் தடைகள் அற்ற, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் (fully access) உருவாக்கப்படும். செவித்திறன் மற்றும் பேச இயலாதோருக்காக, சைகை மொழியாக்குநர் (sign language interpreters) என்ற வசதி ஏற்படுத்தப்பட்டு, தொலைக்காட்சிகள் இயங்கும்.
• மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் 4000ஆக உயர்த்தப்படும்.
• உதவி உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும்.
• கல்வி அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும்.
• மருத்துவ வசதிகள்  இலவசமாகவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறும் வகையிலும் உருவாக்கப்படும்.
• மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி விரிவுபடுத்தப்பட்டு, சர்க்கர நாற்காலிகள், மூன்று சர்க்கர மிதிவண்டிகள் மற்றும் செயற்கைக்கால்களுக்கு மட்டுமின்றி, இதர உதவி உபகரணங்களுக்கும் வழங்கப்படும்.’

சிறப்புக் கல்விக்கான தேசிய ஆராய்ச்சி சிறப்புமையம்

graphic காங்கிரஸ் கட்சியின் கொடி

பொதுவுடைமைக் கட்சியைப் போலவே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் மாற்றுத்திறனாளிகளின் நலன் எனத் தலைப்பிடப்பட்டு சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. அவை:
1. ஊனத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்க, அரசியல் சாசன பிரிவுகள்  15, 16 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
2. அனைத்து பொதுச்சேவைகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் கட்டிடங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும்.
3. புதிய உரிமைகள் சட்டம் மற்றும் 21 வகை ஊனமுற்றோர் குறித்த தகவல்களை எளிதாக பெறும் வகையில் தகவு(portal) உருவாக்கப்படும்.
4. ஊனமுற்றோர் உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கும் வகையில் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறைகளும் தங்களுடைய திட்டங்கள்,  கொள்கை அறிவிப்புகளை விரைவாக மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்படும்.
5. பிரெயில் அச்சு வடிவம் மற்றும் செய்கை மொழி ஆகியவைகளும், மொழிகளாக அங்கீகரித்திட அரசியல் சாசன திருத்தத்திற்கு காங்கிரஸ் கட்சி முன்மொழியும்.
6.  மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப  தரமான கல்வி அளித்திட "சிறப்புக் கல்விக்கான தேசிய ஆராய்ச்சி சிறப்பு மையம் -National Centre of Research and Excellence for Special Education" என்ற நிறுவனம் உருவாக்கப்படும்.
7. மாற்றுத்திறனாளிகளுக்காக அரசுத் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவை வருடாந்திர சமூக தணிக்கை செய்யப்படும்.
8. மாற்றுத்திறனாளிகளின் உடமை உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படும்.
தேசிய கட்சிகள் என்றில்லாமல், தமிழக அளவில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வருமானவரி உச்ச வரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. விடுதலை சிறுத்தைகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களவை உள்ளிட்ட அரசியல் அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்துப் பேசியது மாற்றுத்திறனாளிகளால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் ஆகியோரிடையே  மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த அக்கறைகளும் முன்னெடுப்புகளும் மேலோங்கியிருந்ததை நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் களம் நன்றாக உணர்த்தியிருக்கிறது. இந்த ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கு வித்திட்டவை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகத் தொடர்ச்சியாகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றும் பல்வேறு சங்கங்களின் பல ஆண்டுகால முயற்சி என்பதை நாம் வியப்போடும், பூரிப்போடும் நினைவுகூரும் அதேசமயம், அத்தகைய நடவடிக்கைகளில் அவர்களோடு நம்மையும் இணைத்துக்கொண்டு செயல்பட்டு, சம வாய்ப்பு பெறுவோம், சம பங்கேற்பை உறுதி செய்வோம்.
தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com

நீங்கள் இதைத் தவறவிட்டிருந்தால்

எப்படிக் கடந்தன சென்ற ஐந்து ஆண்டுகள்? - முனைவர் கு. முருகானந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக